My Blog List

Thursday, August 1, 2013

உலக நிதி மூலதனம்

 வே.மீனாட்சி சுந்தரம்

பாரதி புத்தகாலயம்
என்.எம்,சுந்தரம்
தமிழில் ஜோசப்
ரூ.200

Monday, February 11, 2013

இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்




இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
எம்.என்.ராய் தமிழில்: வெ. கோவிந்தசாமி
 கம்யூனிஸ்டுகள், சிறைகளில்  அடைபட்டுக் கிடக்கிற காலங்களில், சிறகுகள் விரித்துப் பறப்பதற்குப் புத்தகங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜூலியஸ் ப்யூசிக்கின் தூக்கு மேடைக்குறிப்பு முதல் இந்த நூல் வரை எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. 'முஸ்லிம் என்பவர் யார், அவர் நல்லவரா, கெட்டவரா தீவிர வாதியா என்றெல்லாம் பல கேள்விகள் மேலெழுந்து வந்து 'விஸ்வரூபம்' எடுத்திருக்கின்றன. 1939ல், எம்.என்.ராய் ராஜத்துரோகக் குற்றச்சாட்டுக்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தபோது  அவர் எழுதியது இந்நூல். 'ஒரு முஸ்லிம் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வரும் விசயத்தை யாருமே சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை' என்ற வேதனைக்குரல், இந்தப் புத்தகத்தின் அடிநாதம். 'இஸ்லாமை, இராணுவவாதத்துடன் சேர்த்துக் குழப்புவது, வரலாற்றை மொத்தமாக மிகத் தவறாகப் புரிந்து கொள்வதாகும். சொல்விளக்க வரலாற்றின்படி இசுலாம் என்பதன் பொருள் அமைதியை உருவாக்குவது என்பதே. வரலாற்றின் ஓர் அவசியமான விளைவே இஸ்லாம் ஆகும். இது மனித குல முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகும். ஒரு புதிய சமூக உறவின் கருத்தியலாக மலர்ச்சி பெற்ற இது, இதற்குக் கைம்மாறாக அம்மனிதர்களின் சிந்தனையைப் புரட்சிகரமானதாக மாற்றியது.என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை முன்வைக்கிறார் ராய். மதக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புகலிடமாகவும் இசுலாமை ஆசிரியர் காண்கிறார். 'சமுகச் சிதைவு, ஆன்மீகக் குழப்பம் திவாலாகிப் போன அறிவுத் தலைமை ஆகியவற்றுக்கு மத்தியில் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த சாமானிய மக்கள், இசுலாமின் ஓர் இறைக் கோட்பாட்டை, கடற்புயலின் நடுவே நம்பிக்கை தரும் நங்கூரமாகக் கருதி உற்சாகமாக வரவேற்றனர்' என்றும் கணிக்கிறார். சமூகக் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த இந்துத் தத்துவத்தைக் காட்டிலும், அதிலிருந்து மீண்டெழ இந்திய மக்களுக்கு ஒரு வழியைக் காட்டியது இசுலாம் என்கிறார். 13-14ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் அது வெற்றி கண்டது. காரணம், அதன் சமூக புரட்சிகரப் பண்பினாலேயே இங்கு அது தன் வேரை ஆழமாக ஊன்ற முடிந்தது' என்ற ஹேவலின் கருத்தையும் சான்று காட்டுகிறார் நூலாசிரியர். வெ.கோவிந்தசாமியின் செறிவான அதே சமயம் நேரடியான மொழியாக்கமும், நேர்த்திமிக்க மேலட்டை அச்சு முதலிய தொழில் நுட்பங்களும் நூலின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்துவன.

இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியு


இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் - 1880- 1905

-பேராசிரியர் பிபன் சந்திரா தமிழில்; ச. சுப்பாராவ்
 1963ல் தில்லி பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம். இருபத்தைந்து ஆண்டுகளில் (1880-1905) பிபன் தன் ஆய்வின் மூலம் மூன்று அம்சங்களை  வெளிக் கொணர்ந்தார். வணிகம், தொழில், நிதித்துறை ஆகிய மூவகைப் பொருளாதாரச் சுரண்டல்களைத் தேசியவாதிகள் கண்டறிந்தனர். இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயர் பொருளாதார நலனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனாலேயே ஏகாதிபத்திய ஆட்சி தொடர்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். இது முதல் விசயம். இரண்டு கச்சாப் பொருட்கள் உற்பத்திக்கும், தமது நாட்டுப் பொருட்களின் விற்பனைக்கும் இந்தியாவைச் சந்தையாக மாற்றுவது; காலனியப் பொருளாதார அம்சங்களை வளர்ப்பது என்ற அந்நிய ஆட்சியாளர்களின் எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்த்தனர்.
 மூன்று: அவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தபோது முன் வைக்கப்பட்ட அனைத்துத் தேசியவாதிகளின் கோரிக்கைகளும், ஒரு சுதந்திர இந்தியாவில் தீர்மானிக்கப்படும் தேசியப் பொருளாதாரக் கொள்கைக்கான விருப்பம் வேர் பிடிப்பதற்கு உதவின. ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகரித்து வந்த ஏழ்மையை இத்தேசம் முதலில் உணர்வது அவசியம். அப்போதுதான் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியுமென ஓங்கிக் குரல் கொடுத்தவரும், அந்நியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதே இந்திய அரசியலின் தலையாய கோட்பாடக இருக்க வேண்டும் என்பதை அறிவித்தவருமான தாதாபாய் நௌரோஜி மிதவாதியாக இருக்க முடியாதுÕÕ என்கிறார் அரவிந்தர். அந்நியர் ஆட்சியின  சுமை குறித்தும், ஏழை மக்களின் துயரங்கள் குறித்தும் மனச் சாட்சியுள்ள ஆங்கிலேய சிவில், இராணுவ அதிகாரிகள் விட்டுச் சென்ற குறிப்புகள், ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு Ôஇந்தியாவில் ஏழ்மையும், பிரிட்டனின் ஆட்சி இல்லாத தன்மையும்Õ என்றொரு நூல் நௌரோஜியால் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாக 1901ல் வெளியாகியிருக்கிறது. பிபன் சந்திராவின் நூலுக்கு முன்னுரையாக, தமிழ்நாட்டு ஆய்வாளர்களுள் ஒருவரான பேரா. கா.அ. மணிக்குமார் எழுதியுள்ள கட்டுரை, மேற்கண்ட செய்திகள் அடங்கிய செறிவுமிக்க பதிவு. 671 பக்கங்கள் கொண்ட காத்திரமான ஆய்வு நூல் பிபனுடையது. இப்பெரிய நூலின் வாசிப்புக்கான திறப்புக் குறிப்புரை (ரிமீஹ் ழிஷீtமீ கிபீபீக்ஷீமீssன் தமிழ்ப் பெயருக்கு, நன்றி: ச. தமிழ்ச் செல்வனுக்கு)யாக பேரா. மணிக்குமாரின் கட்டுரை அமைந்திருக்கிறது. நௌரோஜியின் படைப்புகளிலேயே ஆகச் சிறந்ததென அவர் எழுதிய Ôஇந்தியாவின் வறுமையைக் குறிப்பிடுகிறார் பிபன். இந்திய தேசியம் உருவான காலகட்டத்தில், வறுமையைப் போன்று ஆள்வோர், ஆளப்படுவோர் இடையே பெரும்  இடைவெளியை ஏற்படுத்திய பெருங்கோபத்தை ஏற்படுத்திய பிரச்;னை, வேறெதுவுமில்லை என்கிறார் அவர். Ôமுரட்டு வேகத்தோடு இருக்கும் ஏகாதிபத்தியம்தான் காட்டுமிராண்டித்தனம்Õ என்று 1904ம் ஆண்டு ஆகஸ்டில், ஹேக் கில் நடந்த சர்வதேச சோஷலிஸ காங்கிரசில் தாதாபாய் நௌரோஜி கடுமையான வார்த்தைகளால் பிரிட்டிஷ் ஆட்சியைத் தாக்கி உரையாற்றியதையும் நூலின் இறுதிப்பகுதியில் பிபன் மேற்கோள் காட்டுகிறார். அந்நிய முதலாளியத்திற்கு  எதிராக, சுதேசிகள் முன்வைத்த எல்லாவிதமான பொருளாதாரச் சிந்தனைகளையும் மிக விரிவாக, ஆழமாக ஆராய்கிற நூல் இது. சுப்பாராவின் மொழி பெயர்ப்பு வெகு சரளமான நடையில் அமைந்திருப்பது சிறப்பான அம்சம்.

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்




வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்
ஆர். நார்மன் தமிழில்: ச. சுப்பாராவ்
'வால்மார்ட்' என்ற பெயர் சமீபத்தில் இந்தியா முழுவதிலும்  பேசப்பட்ட ஒன்று. சில்லறை வணிகத்தில் கடை விரிக்கப்போகிற பன்னாட்டு பகாசுர நிறுவனம் இது. நமது ஊர் மளிகைக்கடைகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கையிலேயே அது  தலைநகரங்களில் கடைகள் கட்டத் தொடங்கியாயிற்று. அமெரிக்க நகரமான கிரீன் ஃபீல்டு எனும் சிறு நகரத்தில் வித்தியாசமான ஒரு தேர்தல் நடந்தது. ஒன்று அந்த ஊரின் அருகே இரு பெரும் நெடுஞ்சாலைகள். அங்கே 1, 23,000 சதுர அடியில் கடை கட்டுவதற்கு வால்மார்ட்டிற்கு 63 ஏக்கர் தொழிற்பேட்டை இடத்தை அளிக்கலாமா? இரண்டு பொதுவர்த்தக மாவட்டத்தில் 40,000 சதுர அடிக்கும் மேலான பெரிய கட்டிடத்தை அனுமதிக்கலாமா?  'வால்மார்ட்டை ஆதரித்தவர்கள் தங்களை 'வால்' என்றும், அதற்கு எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்த இந்நூலாசிரியரான ஆல்பர்ட் நார்ட்டன் உள்ளிட்டவர்கள் தங்களை வாலுக்கு எதிரானவர்கள் என்றும் அழைத்துக் கொண்டார்கள். எதிர்ப்பாளர்கள்,  'வாலை நிறுத்துங்கள். மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் 'இல்லை' என வாக்களியுங்கள்' என எழுதி வைத்தார்கள். வால்மார்ட் நிர்வாகம், கையெழுத்தில்லாத மொட்டைக் கடுதாசிகளை எல்லா வீடுகளுக்கும் அனுப்பியது. ஆனால் எங்கள் நகரத்தை நாங்கள் இழக்கிறோம்'  என்ற எதிர்ப்பிரச்சாரம்தான் மக்களின் மனதையும், அறிவையும் தொட்டது. வாக்கெடுப்பு முடிவில் 9 வாக்கு வித்தியாசத்தில் வால்மார்ட் தோற்றது. உள்ளூரில் வால்மார்ட்டை முறியடிக்க வேண்டுமானால் உள்ளூர் மக்கள்தான் களத்திலிறங்க வேண்டும். இறங்கினால் வெற்றி நிச்சயம். தமிழில் இந்த நூலைத் தந்திருப்பவர் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பாளியான ச. சுப்பாராவ். ஒவ்வொரு சிறு கடை உரிமையாளர் கையிலும் இப்புத்தகம் போய்ச் சேர்ந்தால், விளைவுகள் பிரம்மாண்டமாக இருக்கும்.

உணவு மக்களின் அடிப்படை உரிமை




உணவு; மக்களின் அடிப்படை உரிமை
பிருந்தா காரத் தமிழில்; ஆர். பெரியசாமி
 'உலகத்திலேயே இந்தியாவில்தான் சத்துணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில் நூற்றுக்கு எழுபது பேர் சத்துணவின்மையால் அவதிப்படுபவர்களே. சரத்பவார் தலைமையிலான உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது மாநிலங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டைக் குறைத்து, கோதுமைக்குப் பதிலாக தானியங்கள் ஒதுக்கீடு, சம்பூர்ண கிராம ரோஜ்கார் யோஜனா திட்டப்பணிகளுக்கான ஊதியத்தின் ஒரு பகுதியாக உணவுத் தானியங்கள் வழங்கும் முறை நீக்கம், வறட்சிப் பகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் குறைப்பு, உணவு தானியங்களின் விலை அதிகரிப்பு இப்படியான பல தடித்தனமான யோசனைகளை முன்னெடுத்துச் செல்லும் முனைப்பில் உள்ளது. உணவுக்கான மானியங்களை  குறைப்பதன் மூலமே நித்ப்பற்றாக்குறைக்கு முடிவு கட்ட ஒவ்வொரு மத்திய அரசும் முயல்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் கடைசியாகத்தான் சாப்பிட வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தமது தேவைக்குக் குறைந்த அளவுக்கே சாப்பிடுமாறு நேர்கிறது' என்றெல்லாம் பிருந்தா காரத் கடுமையான விமரிசனங்களை முன் வைக்கிறார். பசித்த வயி¤றுகளுக்கு உணவளிப்பதில் இத்தனை முட்டுக்கட்டைகள் போடும் மத்திய அரசு, ஏழை மக்களிடமிருந்து இம்மாதிரி கொள்ளையடித்து பெருவணிக நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகை மட்டுமே ஆண்டிற்கு சுமார் 5 லட்சம் கோடி என்கிறார் அவர். உணவு மற்றும் பொது விநியோகம் ஆகிய அம்சங்களில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அரசுகள் பாராட்டத்தக்க வகையில் செயல்படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த உணவுப் பாதுகாப்பு மசோதா ஏழைமக்களுக்கு கொடுப்பது குறைவு. எடுத்துக்கொள்வதோ மிக அதிகம். இந்நிலையில், இதை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அணிகளும், தலைவர்களும், ஆதரவாளர்களும் போராடி வருவதை இந்நூல்  முழுவதிலும் பிருந்தா காரத் பதிவு செய்திருக்கிறார். அவருடைய எளிய, நேரடியான உரைகளை அதே தன்மைகளுடன் தமிழாக்கித் தந்திருக்கிறார் ஆர். பெரியசாமி.

அம்பேத்கரின் இன்றைய தேவை


அம்பேத்கரின் இன்றைய தேவை
ஜி. இராமகிருஷ்ணன்
'முக்கியமான தொழிற்சாலைகளும், பணிகளும் அரசுடைமையானவையாக இருக்க வேண்டும். காப்பீட்டுத் தொழில் பொதுத்துறையில் இருக்க வேண்டும். தனியார் துறையும், தொழிற்சாலைகளும் பொருளாதாரத்தில் ஒரு பங்கு வகிக்கலாம். ஆனால் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. நிலம் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும். விவசாயத்தில் கூட்டுறவுப் பண்ணைத் திட்டத்தை அறிமுகம் செய்து சிறு விவசாயிகளையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் வலியுறுத்திய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஜி. இராமகிருஷ்ணன் நிகழ்த்தியிருக்கிறார். இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நிலவுகிற தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலை அதன் அனைத்து வடிவங்களிலும் தலையிட்டு அவற்றை அம்பலப்படுத்துகிற உரை இது. இந்துவாகப் பிறந்திருந்த போதிலும், சாதீய மனுதர்மப் பாகுபாடுகளின் உறைவிடமாகியிருக்கும் அந்த இந்துமதத்தைத் துறந்து பௌத்தம் தழுவியவர் டாக்டர் அம்பேத்கர். சிறிய  கையடக்க வடிவில் செறிவான சிந்தனைத் தொகுப்பு.

தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்




தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
 பி. சுந்தரய்யா தமிழில்: என். ராமகிருஷ்ணன்
 இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் முளைத்தெழுந்த நாளில் இருந்து, அது நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. ஆந்திர மாநிலத்தில், 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் வரை நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டம் இது. நல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று  மாவட்டங்களில் கிராம ராஜ்யமே அமைந்தது எனலாம். முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் இவை அனைத்தையும் எதிர்த்து விவசாய மக்களின் ஆயுத எழுச்சியாக இது நடந்தது. விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல முயற்சிகளை அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள இப்போராட்டம் வகை செய்தது. சர்வோதயா இயக்கத் தலைவர் வினோபா பாவே, 'பூதான' இயக்கத்தை முன்னெடுத்தது இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான். மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசை நெருக்கியதில் இதற்கு ஒரு பெரும் பங்குண்டு. கேரளாவின் புன்னப்புரா வயலாரிலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் இவ்வாறு கட்சி நடத்திய போராட்டங்கள¤ன் விளைவாகவே தேசிய அரசியல் வானில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது; 1952-ம்  ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முதல் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சிக் குழுவாகவும் இடம் பெற்றது. இத்தகைய ஒரு மகத்தான போராட்டத்தை வழி நடத்தியவர்களுள் ஒருவரான தோழர் பி. சுந்தரய்யா, தனது நேரடி அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய 600 பக்க ஆவணத்தின் சுருக்கமே  இந்நூல். இது 'சோஷியல் சயன்டிஸ்ட்' இதழில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றது. 65க்கு மேற்பட்ட இடதுசாரி இயக்கம் சார்ந்த நூல்களை எழுதிய என். ராமகிருஷ்ணன் இதைத் தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.

காவிரி \ பிரச்சனையின் வேர்கள் வெ. ஜீவகுமார்
 காவிரி நடுவர் மன்றம், தன் இறுதி உத்தரவை 2007ம் ஆண்டே வழங்கிவிட்டது. இன்று வரை அது அரசிதழில் வெளியிடப்படவில்லை. சம்மந்தப்பட்ட மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றன. ஆனால் உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் செய்த பிறகும் மத்திய அரசு அதற்குத் தயாராக இல்லை. கர்நாடகமும் கூட தனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் தகராறு செய்யத் தொடங்கிவிட்டது. Ôமச்சு மச்சா நெல் விளையும், மகுடஞ் சம்பா போரேறும், குச்சு குச்சா நெல் விளையும் குமுடஞ் சம்பா போரேறும்Õ என்று காவிரியின் மகசூலை பழைய நாட்டுப்பாடல் குறிக்கிறது. பேச்சுவார்த்தை, நிர்வாக நடவடிக்கைகள், சட்டபூர்வமான முயற்சிகள் என தமிழ்நாடு மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும் மிக ஆதாரபூர்வமான சான்றுகளுடன் பதிவு செய்திருக்கிறார் ஜீவகுமார். உணர்ச்சிவயப்பட்ட, ஆத்திரமூட்டும் சொற்கள் இல்லை. மிகவும் நிதானமான பொறுப்புமிக்க குரல் ஒலிக்கும் ஆவணம் இது. காவேரி நடக்கவும், ஓடவும், வாழவும் வேண்டும். அப்போதுதான் 2 கோடி மக்களின் சாகுபடிப் பிரச்சனை, 5 கோடிப் பேரின் குடிநீர்த் தேவை, 12 இலட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதார அடிப்படை இவையாவும் தீரும் என்று உணர்த்துகிற ஆவணம்.

அரசும் - புரட்சியும்




அரசும் - புரட்சியும்
லெனின் தமிழில்: ரா. கிருஷ்ணய்யா
லெனினின் மேதைமைக்கும், புரட்சிகர  உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும் நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது. அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது? 'வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு' என்கிறார்  லெனின். 'சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது' என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் அவர். ஆயுதமேந்திய படைவீரர்களும், சிறைகளும், இன்னபிற சக்திகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டவும் செய்கிற கருவி இது. புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பதும், பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியாமையை நொறுக்குவதும்' பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இலட்சியங்கள்.  இந்த இலட்சிய ஈடேற்றத்தின் விளைவாக அமைகிற அரசு மக்களுடையது. மக்களுக்கானது. இதுவும் ஒரு நாள். 'உலர்ந்து, உதிர வேண்டியதுதான்என்கிறார் லெனின். அது எப்படி ஏன்? இதைத்தான் இந்த நூல் முழுவதிலும் லெனின் விவாதித்திருக்கிறார்.
 தேர்ந்த மொழழி பெயர்ப்பாளர் அமரர் ரா. கிருஷ்ணய்யாவின் நடை நெருடல் இல்லாதது

. மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு




 மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு
மாரிஸ் கார்ன்ஃ போர்த்  தமிழில்: திருப்பூர் மிலிட்டரி பொன்னுசாமி.
 சமகாலச் சூழலில், மார்க்சியம் எதிர்கொள்வது போன்ற நெருக்கடிகளை வேறு எந்த ஓர் அரசியல் தத்துவமாவது எந்தச் சூழலிலாவது எதிர்கொண்டிருக்குமா? எதிரிகளால் கூட அல்ல, 'நண்பர்கள் போன்று நடிப்பவர்களாலும்', உள்ளிருந்தே உலைவைக்கிற உலுத்தர்களாலும்தான் இன்று பெரும் இடையூறுகள் வருகின்றன. எனினும், மார்க்சியம் காலாவதியாகி விடவில்லை. மாறாக, இன்று உலகெங்கும் மறுவாசிப்புக்கு மார்க்சிய நூல்களைத் தேடியலைகிற தேடல்தான் அதிகரித்துள்ளது. இச்சூழலில், மார்க்சிய மூலநூல்களின் வாசிப்பை 'எங்கிருந்து தொடங்குவது?' மார்க்சியம் ஓர் உயிரற்ற, பொருளற்ற சூத்திரமல்ல; மாறாக, அது ஓர் உண்மை நிகழ்முறை எதார்த்த உண்மை. அத்தகைய மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள 'கற்பனாவாத சோஷலிஸமும் அறிவியல் சோஷலிஸமும், நூலில் தொடங்கி, படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளில் வாசிக்க வேண்டியவற்றை, வெறுமனே பெயர்ப்பட்டியலாகத் தராமல் எளிய சுருக்கமான விளக்கக் குறிப்புகளுடன் தந்திருக்கிறார் ஆசிரியர். 'அரசும்- புரட்சியும்' 'என்ன செய்ய வேண்டும், கிராமப்புற ஏழை மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்த (நூல்களின்) நதி மகாநதி, என்றும் வற்றாதது. இறங்கி நீராடப் படித்துறைதான் இக்கையேடு. 

வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம்





வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் (1917-2012) 
கா.அ.மணிக்குமார்
 'மார்க்ஸ் இல்லாதிருந்திருந்தால் வரலாற்றில் எனக்கொரு தனியார்வம் உண்டாகியிருக்காது' என்ற எரிக் ஹாப்ஸ்பாம் புரட்சியின் காலம், மூலதனத்தின் காலம், பேரரசின் காலம், தீவிரங்களின் காலம், தேசம் மற்றும் தேசியம், எப்படி இவ்வுலகை மாற்றுவது, ஆதிகால கலகக்காரர்கள் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். 95 வயதில், கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி காலமாகும் வரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தவர். அதனாலேயே பதவி உயர்வுகளும், அங்கீகாரங்களும் மறுக்கப்பட்டவர். 'குழந்தைப் பருவம் முதல் அரசியலில் மூழ்கியிருந்ததால் நான் வாழ்நாள் கம்யூனிஸ்டானேன்.  அக்டோபர் புரட்சியின் கனவு இன்னும் என்னுள் இருக்கிறது. மானுட விடுதலை என்பது மாபெரும் விசயம் என நான் இன்றும் நினைக்கிறேன்' என்றெல்லாம் அவரே பதிவு செய்திருக்கிறார். புது இடதுசாரிகள் ஒரு மார்க்சிய முகமூடிக்குப் பின்னால் இருந்து கொண்டோ, அல்லது அரசியலற்றதும், அரசியலுக்கு எதிரானதுமான கலாச்சார கருத்து வேற்றுமை என்ற போர்வையிலோ அராஜகவாதிகளின் மறுபிறப்பாக இருப்பதைப் பார்க்கிறோம்" என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். சிறு நூல்  எனினும் மிக காத்திரமானது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய 
பேரா. கா. அ. மணிக்குமாரின் வரலாற்றுப் புலமை வெளிப்பட்டுத் தெரியும் நூல்.

காலனியம் - பிபன் சந்திரா



காலனியம் - பிபன் சந்திரா
 தமிழில் : அசோகன் முத்துசாமி.
 காலனியக் கட்டமைப்பின் நான்கு அடிப்படையான பண்புகளை பிபன் சந்திரா விரிவாக ஆராய்ந்து பார்த்ததன் வெளிப்பாடு இந்நூல். கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதி வந்த மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில் மறைந்த தோழர் அசோகன் முத்துசாமியின் தெளிவான மொழிப் பெயர்ப்பில் வெளியாகியுள்ளது. 'காலனியம் உலக முதலாளித்துவ அமைப்பிற்குச் சேவகம் புரிவது; சமமற்ற பரிவர்த்தனை, சரக்கு உற்பத்தியைத் தனித்தனியாகப் பிரித்து அப்பகுதிகளை உலகச் சந்தையுடனும், காலனியாதிக்கப் பொருளாதாரத்துடனும் இணைப்பது; காலனி நாடுகளின் செல்வத்தைச் சுரண்டுவது அல்லது எதேச்சதிகாரமாகத் தங்கள் நாட்டிற்கு மடைமாற்றுவது இக்கூறுகளைக் கொண்டது. உலக மயமாக்கல் சூழலில், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள்தாம் இந்தியாவின் மிகப்பெரிய சமூக வர்க்கமாக ஆக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம், அந்நிய சக்திகளுடன் கைகோர்ப்பதையோ அல்லது அந்நிய மூலதனத்திற்குத் தடையற்ற அனுமதி வழங்குவதையோ அல்லது பொருளாதாரத்தில் அரசின் பாத்திரத்தைப் பலவீனப்படுத்துவதையோ தடுப்பதில் இடதுசாரிகள் குறித்த அச்சம் ஒரு சக்திமிக்க காரணியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வேறொரு கோணத்தில் இடதுசாரிகளின் பலவீனங்களால் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை முதலாளித்துவ சக்திகள் தமது வர்க்க நலன்களை மட்டுமே பாதுகாக்கிற திசைவழிக்குத் திருப்பிவிட முடிந்துள்ளது என தர்க்கரீதியாக விவாதிக்கிற அரியநூல் இது. 'காலனியம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்திய காரணத்தையே  காட்டி இடதுசாரி அறிவு ஜீவிகள் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதான ஒரு தகவல், இங்கே தொடர்ந்து இடதுசாரி எதிர்ப்பு விஷங்கக்கிக் கொண்டிருக்கிற 'சுதந்திரமான' சிந்தனையாளர்களின் கவனத்திற்குச் சமர்ப்பணம்.

Tuesday, February 5, 2013

விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்



 விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் 
அம்ல்கர் சுப்ரால்
 தமிழில் எஸ். பாலச்சந்திரன் 

கினியா மற்றும் கேப் வெர்டே மக்களின் விடுதலை மற்றும் ஒற்றுமைக்கான ஆப்பிரிக்கக் கட்சியை  நிறுவிய அமில்கர் கப்ரால், போர்ச்சுகலின்  காலனியாதிக்கத் திற்கெதிராகத் தொடர்ந்து போராடிய  தலைவர். அந்தக் காலனியக் கூலிப்படைகளால் 1973, ஜனவரி 20ம் நாள் கினியக் குடியரசின் தலைநகரில் கொல்லப்பட்டவர். அவரது இந்த உரை 1972, ஜூலை 3-7 தேதிகளில் பாரிஸில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் அமில்கரால் நிகழ்த்தப்பட்டது. "விடுதலைப் போராட்ட இயக்கங்கள், தமது தொடக்க நிலையிலேயே தொடர்ச்சியான பண்பாட்டு வெளிப்பாடுகளின் முத்திரையைக் கொண்டவை; அவ்வாறு இருப்பதால், ஒடுக்கப்பட்ட மக்களின் 'பண்பாட்டு மறுமலர்ச்சியைத் தொடர்ந்து இவை உருவாகின்றன. இப்பண்பாட்டுப் போராட்டம்தான் குறிப்பிட்ட தருணத்தில் அன்னிய அடக்குமுறையை எதிர்கொள்வதற்காகப் புதிய வடிவங்களை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக எடுக்கிறது. விடுதலைப் போராட்ட இயக்கம், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடைய உரிமைகளை வென்று பெறுவதற்கான இலட்சியங்களை நிலை நிறுத்தியாக வேண்டும். ஆகவே விடுதலைப் போராட்டத்தில் மட்டுமின்றி, மானிட முன்னேற்றத்திற்கான மாபெரும் போரிலும் அரசியல் கல்வி பயிற்சிக்கான ஆற்றல் வாய்ந்த கருவிகளாகப் பண்பாட்டு வெளிப்பாடுகள் மாறுகின்றன" என்பதாக நிறைவடைகிற இந்த உரை, ஆழமானது ஆராய்ந்து பயில வேண்டியது.

பெடரல் இந்தியாவும் சமஸ்தான இந்தியாவும்


பெடரல் இந்தியாவும் சமஸ்தான இந்தியாவும்
 வெ.சாமிநாத சர்மா
 வரலாற்று ஆசிரியர்களின் பல நூல்கள் ஆய்வாளர்களை மனதிற் கொண்டே எழுதப்படுகின்றன. பரந்துபட்ட சாதாரண வாசகர்களுக்கு அவை எளிமையாக வாசிக்கக் கிடைப்பதுமில்லை. தமிழக வாசகர்கள் கார்ல் மார்க்ஸையும், இங்கர்சாலையும், பிளாட்டோ, சாக்ரடீஸ் உட்பட  உலகின் முக்கியமான அனைத்துச் சிந்தனையாளர்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்களுள் முன்னோடி சாமிநாதன். சுதேச சமஸ்தானங்கள் 562ன் அன்றைய நிலைமையை 'அலங்காரத் துருப்புகளின் அணிவகுப்பு, வறுமையின் மீது கட்டப்பெற்ற சில அரண்மனைகள், பழைய சம்பிரதாயங்களின் சின்னங்கள் ஆகிய இவற்றைத் தவிர வேறு மாறுதலை காண்பதெங்ஙனம்?' என்ற ஒரு வாக்கியத்தில் மனக்கண்முன் கொணர்ந்து விடுகிறார். பெடரல் இந்தியா என்ற அடுத்த பகுதி பிரிட்டிஷார் முன்வைத்து நடைமுறைப்படுத்திய மாகாணப் பொறுப்பாட்சி முறையின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்குகிறது. இறுதி ஒரு வரியில், அனைத்தையும் உடைத்து நொறுக்கவும் செய்கிறார். "எப்படியாயினும், பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் எதிர்பார்க்கப்பட்டபடி, மாகாணப் பொறுப்பாட்சியானது, கொட்டு முழக்கோடே கோலாகலக்தோடே பவனி வரவில்லையென்பது தெளிவாகிவிட்டது."

பட்டியல் சாதிகள்\ பழங்குடிகள்\ அரசு


பட்டியல் சாதிகள்\ பழங்குடிகள்\ அரசு
 ஆனந்த் டெல்டும்டே
 தமிழில்: எஸ்.வி. ராஜதுரை
வெளியீடு. பாரதி புத்தகாலயம், ரூ.25
 பட்டியல் சாதிகள், பழங்குடிகள் என்பன நிர்வாகம் சார்ந்த அடையாளங்களே; காலனிய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவையே இவை. அரசமைப்புச் சட்டநெறிகளைத் தீர்மானிக்க மோதிலால்நேரு குழு அறிக்கையின் சாராம்சமான கோரிக்கைகள் இவை. சாதி, வர்க்க மத, பிரதேச வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஆண்கள் பெண்களுக்கும் சம உரிமைகள், இலவசத் தொடக்கக் கல்வி, அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் முதலியன வழங்கப்பட வேண்டுமெனவும், மதச்சார்பின்மை என்பது அரசின் அடிப்படையான பண்பிலொன்றாக இருக்க வேண்டும் என்றும் 'கோரிய இந்த அறிக்கையை அன்றைய பிரிட்டிஷ் அரசின் சைமன் குழு நிராகரித்திருக்கிறது. 'இந்த நாட்டில் சமூக, பொருளாதார நீதி இருக்கும்படி செய்வதற்கு, தொழில்கள் தேசிய மய மாக்கப்பட வேண்டும், நிலம் தேசியமயமாக்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் நீதியில் நம்பிக்கை கொள்ளும் எந்தவோர் எதிர்கால அரசும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இருந்தாலன்றி, அந்த நீதியை எவ்வாறு செயல்படுத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று 1946 ஜூன்  17 அன்று அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையை இந்நூல் மேற்கோள் காட்டுகிறது. ஆனால், பின்னர் அரசமைப்பு அவையில் அவரே இவற்றை வலியுறுத்தவில்லை. காங்கிரசின் வர்க்க நலன்களுக்கும் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் உகந்தவற்றை மட்டுமே இந்திய அரசு இன்றுவரை முன்னெடுத்து வந்திருப்பதை நூல் சுட்டிக் காட்டுகிறது. பெரும்பாலான தலித்துகள், ஆதி வாசிகள் பிற ஏழை மக்கள் ஆகியோருக்கு இவ்வமைப்பிற்குள் எந்தத் தீர்வும் கிடைக்காது. எனவே  எந்தவொரு புனிதப் பசுவையும் விட்டு வைக்காது, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் உணர்வில் தனது பணியைச் செய்திருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். எஸ்.வி.ராஜதுரையின் ஆற்றொழுக்கான மொழியாக்கத்தில் 'புதுவிசை' இதழில் வெளியான ஒரு கட்டுரையின் நூல் வடிவம் இது.

Monday, January 21, 2013

அணு ஆற்றல் - நூல் அறிமுகம்


1. அணு ஆற்றல்
- ப.கு. ராஜன்
வெளியீடு. பாரதி புத்தகாலயம் ரூ.25
 இந்தியாவில் இன்று மிக அதிகமாக விவாதிக்கப்படுகிற அணு ஆற்றல் தொடர்பாக மிகுந்த நிதானத்துடன் எழுதப்பட்டுள்ள நூல். மனித உடல் தொடங்கி, விமான நிலையங்களில், கடற்கரையில் இடிந்த கரையில், கூடங்குளத்தில் எல்லா இடங்களிலும் கதிர்வீச்சு இயற்கையாய் உள்ளது. அதன் சராசரி அளவு ஆண்டிற்கு 2400 மைக்ரோ சிவர்ட். ஆனால் அணுமின் நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்பு 1000 மைக்ரோ சிவர்ட்தான்; இந்தியாவிலும், உலகெங்கிலும் இயங்கும் அணுமின் நிலையங்களிற் பெரும்பாலானவை இந்த வரம்புகளைவிட மிக மிகக் குறைவான கதிர்வீச்சுடன்தான் இயங்குகின்றன என்கிறார் ராஜன். இந்திய அணு ஆற்றல் திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது என்ற உண்மையை வரைபடங்கள் புள்ளி விவரங்களையும்  விளக்குகிறார். சாதகம் பாதகம் என இரண்டு பக்க நியாயங்களையும் முன் வைத்து, மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் உலகமயமாக்கல் கொள்கையையும் இவற்றுடன் சேர்த்துப் பார்த்தால்தான் உண்மை தெளிவாகும் என நிறுவுகிறார். அமெரிக்க அரசின் தொங்குசதையாகிவிட்ட அரசும், எந்தவித தொலைநோக்குப் பார்வையுமில்லாத அணு ஆற்றல் ஒழுங்கமைப்பு வாரியமும் (கிணிஸிஙி) மக்களின் முன்பு பேச மறுக்கிற மறைக்கிற உண்மைகளை அம்பலப்படுத்துகிற நூல். அணு ஆற்றல் ஒழுங்கமைப்பு வாரிய முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன், இந்தியாவில் இப்போதைய அணு உலைகள் ஒவ்வொன்றிலும் 'பாதுகாப்பு லட்சணங்கள்' பற்றிய உண்மைகளைத் தந்திருக்கிறார். 'இதுதான் நிலை என்றால் இப்போதைய ஏஇஆர்பி சான்றிதழை நம்பி அணு உலையைத் துவக்க அனுமதிப்பது பெரும்பகுதி மக்களின் நலன் குறித்து எடுக்கவே கூடாத அபாயகரமான முடிவாகும் என்றும் அதே சமயம் மூன்று கட்ட அணு ஆற்றல் திட்டத்தை வகுத்துத் தந்த ஹோமிபாபாவின் அணுகு முறைப்படி புதிய திட்டங்களை தன்னாட்சி பெற்ற ஒழுங்குமுறை வாரியத்தின் கீழ்  வெளிப்படையான தன்மையுடன் நிறைவேற்றுமாறும் வலியுறுத்துகிறது ராஜனின் நூல்.