My Blog List

Thursday, March 13, 2014

சோஷலிஸமே நிரந்தர அறிவியல்


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 தமிழில்: இரா. நடராசன்



ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955) மனித வரலாற்றின் தலை சிறந்த மேதைகளில் முதன்மையானவர். அரிஸ்டாட்டில், கலீலியோ, நியூட்டன் வரிசையில் அடுத்து இடம் பெறும் பெரிய அறிவு ஜீவி ஐன்ஸ்டீன். 1905ல் சார்பு தத்துவம் முதல், ஒளியின் மின் விளைவு வரை இவர் வழங்கிய நான்கு ஆய்வுகள் இயற்பியலை மட்டுமல்ல உலக நடப்பையே மாற்றி அமைத்தன. இவர் அமைத்து வழங்கிய  E=mc2 சமன்பாடு இல்லையேல் இன்றைய மின் அணு சாதனம் ஏதும் இல்லை. இதே சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு நடந்தபோது அதன் விளைவுகளை முன் வைத்து அறிவியலை அழிவுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக முதலில் களமிறங்கிய மாமனிதர் ஐன்ஸ்டீன், யூதராகப் பிறந்ததற்காக ஹிட்லரால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, சுவிட்சர்லாந்திலும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலுமாய் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஐன்ஸ்டீன் இன்றைய அறிவியல் மயமான நவீன உலகின் ஆக்கச் சிற்பிகளில் முதன்மையானவர் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.  ஐன்ஸ்டீன் எந்த நாடுகளுக்கெல்லாம் சென்று வாழ்ந்தாரோ, உலக அறிவியல் கண்டு பிடிப்புகளின் மைய நீரோட்டமும் அந்த நாடுகளை நோக்கி நகர்ந்தது. தலைசிறந்த மனிதநேய சிந்தனையாளரான ஐன்ஸ்டீன் தன் வாழ்நாளில் ஏறக்குறைய 26 முறை நேர் காணல்கள் செய்யப்பட்டார். அதைத் தவிர தன் கருத்துக்களை சுதந்திரமாகவும் திறந்த மனதுடனும் கட்டுரைகளாக, எழுத்துக்களாக, உரைகளாக கடிதங்களாகப் பகிர்ந்தார். அப்படியான அவரது உரையாடல்களிலிருந்து இன்றைய பொருத்தப்பாட்டோடு கூடியவற்றைத் தேர்வு செய்து இங்கு வழங்கப்படுகிறது. பதிலின் முடிவில் யாருக்கு எந்த ஆண்டு கூறிய பதில் என்பதை அடைப்புக் குறிக்குள் பார்க்கலாம்.
 நன்றி: விக்கிப்பீடியா.

ஒரு சராசரி கடவுள் நம்பிக்கைவாதி நீங்கள் இல்லை, என்பது தெரியும். ஆனால் உள்ளுணர்வு, ஆழ்மனம் என்றெல்லாம் நம்பிக்கை வைத்துள்ளீர்களே... இது முரணாக இல்லையா?

அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்ன? மனித உள்ளுணர்வு என்பதில் சந்தேகமே இல்லை. 1919 மே 29, ராயல் அகாடமியின் இரு குழுக்கள் எனது சார்பியல் சரியா என்பதை பரிசோதிக்க களம் இறங்கின. அந்த சூரிய கிரஹணத்தின் அனைத்து ஆய்வுகளின் போதும் எனது அனுமானங்கள்  (Hypotheses)  சரியென நிரூபிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்பினேன். எனது அனுமானம் எனது உள்ளுணர்வின் வெளிப்பாடு. அனைவரும் நம்பிக்கைகொண்டிருந்த ஒரு பாதைக்கு முற்றிலும் எதிராக எனது உள்ளுணர்வு ஒரு பாதையை முன்மொழிந்தது. அன்று அவர்கள் சார்பியலுக்கு தங்களது கணக்கீடுகள் ஒத்துப் போகவில்லை என்று சொல்லி இருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர்கள் என்பாதை சரி என்று நிருபித்தது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. கற்பனை வளமிக்க படைப்பாக்க சிந்தனை அறிவுப் பூர்வமான அணுகுமுறையை விட முக்கியம். உள்ளுணர்வு என்பது இயற்கையில் அமைந்த மனித இயல்புகளில் ஒன்று. எல்லாரும் பனியில் விறைத்து செத்துக் கொண்டிருந்தபோது கற்களால் தீப்பொறி வரவழைத்து  நெருப்பை படைத்தது அது தான் (விவேரஃக்\1929)

பயன்பாட்டு அறிவியல்  (Applied Science)  எனும் தனித்துறை உருவாகி வருகிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?


வாழ்வை எளிதாக்கி மனித வேலைப்பளுவை குறைக்க, வீட்டு உபயோக கருவிகளாகவும், இயந்திர உற்பத்தியாகவும் இன்று அறிமுகமாகி இருக்கும் அறிவியல் இயற்பியல், வேதியியல் என அனைத்தின் கலவை. ஆனால் வாழ்வை எளிதாக்கிவிட்ட கருவி யுகம் நமக்கு மிக குறைவான மன மகிழ்ச்சியே தருகிறது. அறிவியல் தொழில் நுட்பம் யுத்தத்தின்போது நம் ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்ளப் பயனாகிறது. அமைதி காலத்திலோ நம் வாழ்வை துரிதப்படுத்தி நிச்சயமற்ற தன்மையை அது வழங்குகிறது. மனித இனத்தின் அடிமை முறையை ஒரு வகையில் முடிவுக்கு கொண்டு வந்துள்ள இது முழு மனித இனத்தையும் இயந்திரவியலின் அடிமையாக்கிவிடும் அபாயம் கொண்டது. இயந்திர யுக மனிதன் நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தொழில்நிலையத்தில் உற்பத்தி சக்திகளின் ஒருவனாய் ஒருநாள் முழுவதும் ஒரே மாதிரி வேலையில் ஈடுபட்டு பங்கீட்டின்போது மிகக் குறைவான மதிப்பீடை அடையும் துயரமாய் வெடிக்கும் அபாயம் இதற்கு உண்டு. மனித இனம் குறித்த அக்கறையும் அவனது பயன்பாடு குறித்த மனத்தெளிவும் மறந்த அறிவியல் ஆபத்தில் தான் போய் முடியும். விற்பனைக்காக சந்தைகளை நிரப்ப இருக்கும் கருவிகளில் நான் அறிவியலை மட்டும் பார்க்கவில்லை அதன் பின் ஒளிந்திருக்கும் கலாச்சார சரிவையும் சந்தைகளின் மாய வலையையும் சேர்த்தே காண்கிறேன். சாதாரண மனிதர்களின் தீர்க்க இயலாத கூலி - வேலை மற்றும் படைப்பாக்க பங்களிப்பின் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமாக நான் அதை பார்க்கிறேன். உங்கள் அறிவியல் வரைபடங்கள் சமன்பாடுகள் நடுவே மனிதனை மறந்து விடாதீர்கள். மனித  முன்னேற்ற வரமாக அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும். சாபமாக அல்ல. (நியூயார்க் டைம்ஸ்-1931)

E=mc2  சமன்பாட்டின் கணித நிரூபணம், சமீபத்திய அறிவியல் ஆய்வு அடிப்படையிலான நிரூபணம் எது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது?


ப: காக்ராஃட்(Cockcroft) மற்றும் வால்டன் (Walton) இருவருமாக ஆய்வடிப்படையில் நிறைக்கும் ஆற்றலுக்குமான சார்பை நிறுவி இருக்கிறார்கள். நிறையும் ஆற்றலும் பருபொருளின் அடிப்படையில் சொல்வதானால் ஒரே நாணயத்தின் இருமுகங்கள். இச்சமன்பாடு, இது நான் எனது 1905 ஆய்வுக் கட்டுரையில்  (Does the Inertia of a Body Depend upon its Energy Content) ஒரு வாசகமாக இடம் பெற வைத்திருந்ததன் சுருக்கம். ஒரு பொருள் L எனும் ஆற்றலை கதிர்வீச்சாக வழங்குமாயின் நிறை L/C2  எனும் விகிதத்தில் முற்றிலும் சுருக்கமுறும் என்பதிலிருந்து அது தொடங்கியது. m=L/c2 என முதலில் விரிவாக்கம் அடைந்த அதை கணித நிரூபணப் படி நிலையின்போது  E=mc2 என அடைய நேர்ந்தது. அறிவியல் ஆய்வு அந்த கருத்துரு (Hypothesis) அறிவியல் மெய்மையாக  (fact)  விரிவாக்கம் பெற்றுள்ளது. இந்தப் படிநிலைகளில் கணிதமா, அறிவியல் ஆய்வா எது எதனை விட அவசியம்  என்றெல்லாம்  நாம் புரிந்து கருதவாய்ப்பில்லை. இவை ஒன்றுக்குள் ஒன்று. (ஆண்டனோயா வாலண்டின் -1940)

சமீபத்தில் கோட்பாட்டு இயற்பியல் குறித்த உங்களது ஹெர்பெர் ஸ்பென்சர் உரையில் 'எளிமையாக புரிந்து கொள்வதற்கும் எளிமைப்படுத்திவிடுவதற்கும் வித்தியாசமுள்ளதாக' பேசி இருக்கிறீர்கள். இதை சற்று விளக்க முடியுமா?


சார்பு தத்துவத்தின் அடிப்படைகள்  வெளிவந்தபோது உலகெங்கும் அது புரியவில்லை எனும் கருத்தாக்கம் எழுந்தது. எவ்வளவோ சித்தாந்தங்கள் வெளிவந்த இந்த நூற்றாண்டின் இந்த கால கட்டம் சார்பியலை ஏற்றதற்கு அதை அவசியமான குவாண்டவியல் விஞ்ஞானிகள் புரிந்து விவாதித்ததே முக்கிய காரணம். இயற்பியல் அடிப்படைகள் மனித மனதின் படைப்பாக்கத்திலிருந்தே உருவாகின்றன. ஆனால் அக உலக சக்திகளின் வெளிப்பாடுபோல ஒரு வகை பாவனையோடு வேண்டுமென்றே கடினத்தன்மையை சிலர் வரிந்தேற்றுவதை நான் அறிவியல் என்று ஏற்கமாட்டேன். அதேசமயம் எல்லாமே புல் அறுக்கும் தொழிலாளி அளவுக்கு எளிதில் பிடிபடும்படி எளிமைப்படுத்தி விடுதல் நியாயமே இல்லாதது. கைக் கடிகாரத்தை ஒருவர் புரிந்து கொள்வது போன்றது அது. அவர் இரண்டு முட்கள் இருப்பதையும் அவை நகர்வதை வைத்து காலமறிதலையும் கற்கிறார். அவரால் 'கிளிக் கிளிக்' சத்தத்தையும் கேட்க முடிகிறது. ஆனால் வாட்சை திறந்து உள்ளே என்ன உள்ளது என்றும் அவர் அறிந்திருக்க அவசியமில்லை. ஆனால் அது குறித்து அவருக்கு கற்பனையில் ஒரு அமைப்பாக்கம் பிடிபடுகிறது. அவர் பார்த்த பொருட்களை கருவிகளை வைத்து அவருக்கு ஏற்பட்ட அனுமானம் அது. உண்மையான அமைப்பிலிருந்து அவர் மனங்கொண்ட கற்பனை அமைப்பு எவ்வகையில் ஒற்றுமை- வேற்றுமை கொண்டது என்பதை ஒப்பிட நீண்ட புரிதல் தேவை. கடிகார உட்கட்டமைப்பு பிடிபட அதன் தேவை, அவரது நிபுணத்துவம், அவர் யார் என பல படிநிலைகளில் நாம் கருத வேண்டியுள்ளது. கடிகார நிபுணத்துவமிக்க ஒருவரோடு ஒப்பிடும் அளவில் இவர் வேறுபட்டாலும் ஒவ்வொரு அறிவு நிலையாக விரிவடையும்போதுதான் உண்மை கருவியாக்கம் அவருக்குப் பிடிபடும். இத்தகைய அளவில் கோட்பாட்டு இயற்பியலை நாம் அணுக வேண்டும். கடிகாரத்தின் உட்கட்டமைப்பும் முழுமையாக அந்த கைக்கடிகார பயன்பாட்டாளருக்குப் புரியவேண்டும் என்றால் அது அவரது ஈடுபாடு பொறுத்த விஷயம். கடிகார உற்பத்தியாளர்கள் அவருக்குப் புரியும் வகையில் தான் அதன் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்வதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்காது என்றே நம்புகிறேன் (லியோப்போர்டு இன்ஃபீல்டு-1941)

இன்றைய உலகின் அவசியமான கல்வியறிவு எந்த புதிய துறையை வெகுஜனங்களுக்கு எடுத்துப் போகும்படி இருக்க வேண்டும். பள்ளி அளவில் நாம் சார்பியலை குழந்தைகளுக்குத் தரலாமா?


உலகை இருவித உலகாக வரலாற்றாளர்கள் பார்க்கிறார்கள். சிலர் நவீன நாகரீகம் வந்த பிறகு - அதற்கு முன் என பிரிக்கிறார்கள். சிலர் கிருஸ்த்துவிற்கு முன்- பின் என பிரிக்கிறார்கள். ஹாவர்டு பல்கலைக்கழகம் சார்பியலுக்கு முன் - பின் என வரலாற்றைப் பிரித்து சமீபத்தில் அறிவித்தது. ஆனால் ஹிரோஷிமா- நாகசாகி அணுகுண்டு வீச்சிற்கு பின் அணுஆயுதப் பெருக்கம், அணுக்கதிர் ஆபத்துகளுக்கு முன் அதன் பின் என உலக வரலாறு எதிர்காலத்தில் புரிந்து கொள்ளப்படும் நிலையே உண்மைநிலை எனப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்ல நாம் மக்களிடம் அணுக்கதிர் வீச்சின் அடிப்படைகள் குறித்தே இன்று கல்வியளிக்கும் அவசியத்தில் உள்ளோம்.  உலகம் இதுவரை பார்த்திராத பயங்கரமான பேரழிவுப் பாதையைத் தேர்வு செய்து விட்டதென்றே தோன்றுகிறது. புதிய வகை அணுகுமுறை தேவை, புதிய பாதையில் பேரழிவைத் தவிர்ப்பது எப்படி என்பதையே நாம் கல்வியின் அடிப்படையாக, நீரோட்டமாகக் கொள்ள வேண்டும். புவியின் கதிர்வீச்சு நிரந்தரமாக நமது வாழ்நிலத்தை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றப்போகிறது. புவியின் ஆதார இயற்கை நலங்களை மனிதர்களின் ஆதிக்க அரசியலும் பேராசை பொருளாதார அமைப்புகளும் பெரிய அளவில் அழிவுக்கு உட்படுத்தப் போவதைப்பார்க்க முடிகிறது. கல்வி இதற்கு எதிராக செயல்பட வேண்டும். புவியை காப்பது குறித்தே அனைத்து வகைப் பாடப் பொருளையும் கட்டமைக்க வேண்டியுள்ளது. தீர்வு அறிவியலிடம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அது மனிதர்களின்  இதயத்தில் உள்ளது. (நியூயார்க் டைம்ஸ்-1946)

ரஷ்யாவில் நடப்பதை உலகின் அச்சுறுத்தலாகப் பார்க்கிறீர்களா?


போல்ஷ்விஸம் ஒரு முக்கியமான சோதனை. தனிமனிதர்களுக்கு மேலாக சமூகம். மனிதஇன சமூக-பரிணாமவியலின் உச்சமாய் கம்யூனிசமே இறுதி இலக்காகக் கூட கருதலாம். போல்ஷிவிய சோதனையை குறிப்பாக நாடுகள் பரிசீலித்து பரிசோதிக்கலாம். ஆனால் ஸ்டானின் மீதான சர்வாதிகார குற்றச்சாட்டுகளின் மறுபக்கத்தையும் நாம் அறிய வேண்டும். ஹிட்லர் மாதிரி ஒரு ஆதிக்க அதிகார வெறியை எதிரியாக முகங்கொள்ளும்போது நாம் வெளியிலிருந்து விமர்சிப்பது மிகவும் எளிது. ரஷ்யாவின் அறிவுஜீவிகள் கூட அதை ஊர்ஜிதம் செய்கிறார்கள். தற்போதைய உலக அமைதி நேசராக நாம் சோவியத்தைப் பார்க்கிறோம். ஆனால் தேசிய வாதம், ஒரு சமூகத்தின் பாரம்பரியம், தனிமனித பங்களிப்புகள் இனக்குழு அங்கீகாரம் இவையும் சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. இது ரஷ்யர்களுக்கும் தெரியாததல்ல. (எம்.கே.வைஸ் ஹர்ட்-1949)

ஐன்ஸ்டீன் அறிவு ஜீவி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பணம் பண்ணத் தெரியாதவர்! செல்வந்தராகும் அளவுக்குத் திறனில்லை என்று உங்கள் மீது ஒரு விமர்சனம் உள்ளதே?


அமெரிக்கர்களுக்கு செல்வந்தர் ஆவது ஒன்றே இலக்காக இருப்பது தெரிந்ததுதான். நான் எனது கண்டுபிடிப்புகளுக்காக அறிவியலுக்காக ஒரு போதும் ஊதியம் எதுவும் பெறவிரும்பவில்லை. எனது அறிவியல் நோக்கிய விருப்பும் ஈர்ப்பும் என் சுய ஆர்வம் சார்ந்தவை. இத்தனை டன் பருத்திக்கு இத்தனை டாலர் என விலை சொல்ல எனது பங்களிப்பைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். ஒரு இசையை நோக்கி ஈர்க்கப்படும் ரசிகனாய், நான் அறிவியலைப் பின் தொடர்கிறேன். அறிவியலால் வரும் பணம், மதிப்பு, அது தரும் பதவி பட்டங்கள் பெயர் அடைமொழி எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. எதுவும் அதனினும் சிறந்ததாக இல்லவே இல்லை. எனது மகிழ்ச்சியாகவும் ஒரே மனநிறைவாகவும் இருக்கும் ஒன்றை செய்திட தொடர்ந்து என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நான் வேறு நோக்கங்களுக்கு என்னை திசை திருப்பிட யார் நிர்பந்தித்தாலும் பணியமாட்டேன். சுதந்திர படைப்பாக்க சிந்தனையை கற்பனைத் திறனை தொடர்ந்திட தேவையான அனைத்தும் என்னிடமே உள்ளது. உங்களிடமும் உள்ளது என்பதை மதித்தபடி என் ஈடுபாட்டை தொடர்ந்திட விரும்புகிறேன் (வைஸ்ஹார்ட், 1930)

இயற்பியலின் பன்முனைக் கோட்பாடுகளை இணைக்கும் யூனிஃபைடு ஃபீல்டு தியரி நோக்கிய உங்கள் பயணம் எந்த அளவிற்க உள்ளது?


அணுக்கருவியல், அணுவிற்கு உள்ளே இருக்கும் உட்கரு துகள்களின் அமைப்பை ஆராய்கிறது. குவாண்டவியல் சார்புதத்துவமான விண்வெளியின் பிரமாண்ட அமைப்புகளும் இணைத்து ஒருமித்த கோட்பாட்டை எட்டுவதற்கான வேலையிலேயே என் வாழ்வை முழுமையாக்கிட விரும்புகிறேன். அதற்கு மட்டுமே என் நேரத்தை, வேலைபோக மீதி நேரத்தை- கழிக்கிறேன். அவ்வகைக் கோட்பாடு சாத்தியமாகும்போது அறிவியல் மனித வாழ்வின் அடுத்த வளர்ச்சிப் படி நிலையை எட்டி இருக்கும். (ரேமாண்ட் ஸ்விங்-1950)

ஒரு இயற்பியலாளராக, விஞ்ஞானியாக ஆகாமல் போயிருந்தால் என்ன ஆகி இருப்பீர்கள்?


அறிவியல் மனிதனாக ஆகாமல் போயிருந்தால் நான் இசைக்கான மனிதனாக ஆகியிருப்பேன். இப்போதும் எனது வயலின் கருவியும் விசைப் படகும் எனக்கு என் அடையாளமாக நான் கருதும் ஈடுபாடான விஷயங்கள். நாட்டின் அதிபராகும்படி மட்டுமல்ல பல்கலைக்கழக வேந்தர் முதல், நகர மேயர் என பல பதவிகள். ஆனால் என் ஈடுபாடு அறிவியலும் என் ஆசிரியர் பணியும் தான். ஒருவர் பெரிய ஆளாக வாழ்கிறாரா என்பதைவிட தன் சுய விருப்பப்படி பாசாங்கற்ற மனிதராக வாழும் உரிமை பெரியது என்பது என் கருத்து.

சோஷலிஸம் ஏன்?  (Why Socialism?)


மனித இனவளர்ச்சி குறித்த இயலில் சோஷலிஸமே நிரந்தர அறிவியல் என்று எனக்குப்படுகிறது. மனிதர்களின் சமூக சிந்தனை என்பதன் பரிணாம வளர்ச்சி சோஷலிஸ சமுதாயத்தை நோக்கியே இட்டுச் செல்ல முடியும். உற்பத்தி- லாபம் இவை பற்றிய பொருளாதார நிபுணத்துவம் இல்லாத என்னைப் போன்ற ஒருவருக்கு இது குறித்து கருத்துகூற  உரிமை உள்ளதா என்றால், அது இன்னும் சிறப்பான தகுதியாக இருக்குமெனக் கருதுகிறேன். தற்போதைய முதலாளிய சமூகத்தின் பொருளாதார ஆதிக்கமும் மூலதன குவிப்பிற்காக நடக்கும் சுரண்டலுமே அனைத்து வகையிலும் பிரச்சனைகளின் தீய ஊற்றாக உள்ளது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் உச்சத்தில், இருப்போருக்கும் இல்லாதோர்க்குமான இடைவெளியை சந்தைப் பொருளாதாரம் ஆழப்படுத்துவதால் சமூகத்தின்  அனைத்து தட்டு மனிதர்களுமே, அபாயகரமான போட்டி, பாதுகாப்பின்மை, சுரண்டல் மனப்பான்மை, ஏமாற்று என எதிலும் மன அமைதியற்று சிதைவதைக் கண்கூடாகக்  காணமுடிகிறது. இவ்வகை திட்டமிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு சோஷலிஸமல்ல. இதில் அதிகார அமைப்புகள் நிறுவனமாகி சந்தைகளை ஆக்கிரமிக்கின்றன. இன்றைய உலகில் மிகப் பெரிய சிக்கல் தனிமனிதனுக்கும் அவனை உருவாக்கிய சமூகத்திற்குமான பரஸ்பர முரண்கள் தீயசக்தியாக உருவெடுப்பதே ஆகும். மேற்கண்ட அனைத்து வகை சிக்கல்களுக்குமான ஒரே நிரந்தரத் தீர்வு சோஷலிஸ பொருளாதாரமென்றே நான் நம்புகிறேன். அத்தோடு நமது கல்வியில் சோஷலிஸத்தை ஒரு அங்கமாக இணைக்க வேண்டும். (மன்த்லி ரிவ்யூ-1949)

ஆத்திகவாதமா? நாத்திகவாதமா? உங்கள் நிலைப்பாடு என்ன?


நான் ஒரு அறிவியல்வாதி. ஒரு உதாரணம் சொல்கிறேன். X  எனும் மனிதர் கடுமையாக உழைப்பவர்; Y ஒரு நிறைந்த பக்திமான். Y ஐ ஆதரித்து X ஐவிட அதிர்ஷ்டம் கொட்டவைக்கும் ஒரு கடவுள் எப்படி நியாயமானதாக இருக்க முடியும்? குண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோஷிமாவின் பவுத்த ஆலயங்களின் சிதிலமடைந்த பகுதிகளுக்குப் போனபோது ஸ்பீனோசாவின் கடவுள் குறித்த நிலைப்பாடுகளை நான் பரிசீலிக்கத் தொடங்கினேன். ஆட்சியாளனின் முன்நோக்கிய திட்டம் - ஆதிக்க அரசியலின் சமரசம், இவர்களது கடவுள் யார் பக்கம் என்பதை நாம் கூறவேண்டியதே இல்லை. இன அடையாளமாய் லட்சக்கணக்கில் கொலையுண்டு தேசிய அடையாளமாய் பேரழிவுக்கு உட்படும் ஒரு மத அமைப்பைக் கடந்த சர்வதேச மனித நேயத்தை அறிவியல் சிந்தனை மட்டுமே விதைக்க முடியும். Be Scientific. (பால்.ஏ.ஸ்ஷில்ப் (1949).

புதிய புத்தகம் பேசுது (2013 அக்டோபர்)


Thursday, August 1, 2013

உலக நிதி மூலதனம்

 வே.மீனாட்சி சுந்தரம்

பாரதி புத்தகாலயம்
என்.எம்,சுந்தரம்
தமிழில் ஜோசப்
ரூ.200

Monday, February 11, 2013

இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்




இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
எம்.என்.ராய் தமிழில்: வெ. கோவிந்தசாமி
 கம்யூனிஸ்டுகள், சிறைகளில்  அடைபட்டுக் கிடக்கிற காலங்களில், சிறகுகள் விரித்துப் பறப்பதற்குப் புத்தகங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜூலியஸ் ப்யூசிக்கின் தூக்கு மேடைக்குறிப்பு முதல் இந்த நூல் வரை எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. 'முஸ்லிம் என்பவர் யார், அவர் நல்லவரா, கெட்டவரா தீவிர வாதியா என்றெல்லாம் பல கேள்விகள் மேலெழுந்து வந்து 'விஸ்வரூபம்' எடுத்திருக்கின்றன. 1939ல், எம்.என்.ராய் ராஜத்துரோகக் குற்றச்சாட்டுக்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தபோது  அவர் எழுதியது இந்நூல். 'ஒரு முஸ்லிம் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வரும் விசயத்தை யாருமே சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை' என்ற வேதனைக்குரல், இந்தப் புத்தகத்தின் அடிநாதம். 'இஸ்லாமை, இராணுவவாதத்துடன் சேர்த்துக் குழப்புவது, வரலாற்றை மொத்தமாக மிகத் தவறாகப் புரிந்து கொள்வதாகும். சொல்விளக்க வரலாற்றின்படி இசுலாம் என்பதன் பொருள் அமைதியை உருவாக்குவது என்பதே. வரலாற்றின் ஓர் அவசியமான விளைவே இஸ்லாம் ஆகும். இது மனித குல முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகும். ஒரு புதிய சமூக உறவின் கருத்தியலாக மலர்ச்சி பெற்ற இது, இதற்குக் கைம்மாறாக அம்மனிதர்களின் சிந்தனையைப் புரட்சிகரமானதாக மாற்றியது.என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை முன்வைக்கிறார் ராய். மதக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புகலிடமாகவும் இசுலாமை ஆசிரியர் காண்கிறார். 'சமுகச் சிதைவு, ஆன்மீகக் குழப்பம் திவாலாகிப் போன அறிவுத் தலைமை ஆகியவற்றுக்கு மத்தியில் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த சாமானிய மக்கள், இசுலாமின் ஓர் இறைக் கோட்பாட்டை, கடற்புயலின் நடுவே நம்பிக்கை தரும் நங்கூரமாகக் கருதி உற்சாகமாக வரவேற்றனர்' என்றும் கணிக்கிறார். சமூகக் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த இந்துத் தத்துவத்தைக் காட்டிலும், அதிலிருந்து மீண்டெழ இந்திய மக்களுக்கு ஒரு வழியைக் காட்டியது இசுலாம் என்கிறார். 13-14ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் அது வெற்றி கண்டது. காரணம், அதன் சமூக புரட்சிகரப் பண்பினாலேயே இங்கு அது தன் வேரை ஆழமாக ஊன்ற முடிந்தது' என்ற ஹேவலின் கருத்தையும் சான்று காட்டுகிறார் நூலாசிரியர். வெ.கோவிந்தசாமியின் செறிவான அதே சமயம் நேரடியான மொழியாக்கமும், நேர்த்திமிக்க மேலட்டை அச்சு முதலிய தொழில் நுட்பங்களும் நூலின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்துவன.

இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியு


இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் - 1880- 1905

-பேராசிரியர் பிபன் சந்திரா தமிழில்; ச. சுப்பாராவ்
 1963ல் தில்லி பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம். இருபத்தைந்து ஆண்டுகளில் (1880-1905) பிபன் தன் ஆய்வின் மூலம் மூன்று அம்சங்களை  வெளிக் கொணர்ந்தார். வணிகம், தொழில், நிதித்துறை ஆகிய மூவகைப் பொருளாதாரச் சுரண்டல்களைத் தேசியவாதிகள் கண்டறிந்தனர். இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயர் பொருளாதார நலனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனாலேயே ஏகாதிபத்திய ஆட்சி தொடர்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். இது முதல் விசயம். இரண்டு கச்சாப் பொருட்கள் உற்பத்திக்கும், தமது நாட்டுப் பொருட்களின் விற்பனைக்கும் இந்தியாவைச் சந்தையாக மாற்றுவது; காலனியப் பொருளாதார அம்சங்களை வளர்ப்பது என்ற அந்நிய ஆட்சியாளர்களின் எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்த்தனர்.
 மூன்று: அவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தபோது முன் வைக்கப்பட்ட அனைத்துத் தேசியவாதிகளின் கோரிக்கைகளும், ஒரு சுதந்திர இந்தியாவில் தீர்மானிக்கப்படும் தேசியப் பொருளாதாரக் கொள்கைக்கான விருப்பம் வேர் பிடிப்பதற்கு உதவின. ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகரித்து வந்த ஏழ்மையை இத்தேசம் முதலில் உணர்வது அவசியம். அப்போதுதான் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியுமென ஓங்கிக் குரல் கொடுத்தவரும், அந்நியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதே இந்திய அரசியலின் தலையாய கோட்பாடக இருக்க வேண்டும் என்பதை அறிவித்தவருமான தாதாபாய் நௌரோஜி மிதவாதியாக இருக்க முடியாதுÕÕ என்கிறார் அரவிந்தர். அந்நியர் ஆட்சியின  சுமை குறித்தும், ஏழை மக்களின் துயரங்கள் குறித்தும் மனச் சாட்சியுள்ள ஆங்கிலேய சிவில், இராணுவ அதிகாரிகள் விட்டுச் சென்ற குறிப்புகள், ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு Ôஇந்தியாவில் ஏழ்மையும், பிரிட்டனின் ஆட்சி இல்லாத தன்மையும்Õ என்றொரு நூல் நௌரோஜியால் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாக 1901ல் வெளியாகியிருக்கிறது. பிபன் சந்திராவின் நூலுக்கு முன்னுரையாக, தமிழ்நாட்டு ஆய்வாளர்களுள் ஒருவரான பேரா. கா.அ. மணிக்குமார் எழுதியுள்ள கட்டுரை, மேற்கண்ட செய்திகள் அடங்கிய செறிவுமிக்க பதிவு. 671 பக்கங்கள் கொண்ட காத்திரமான ஆய்வு நூல் பிபனுடையது. இப்பெரிய நூலின் வாசிப்புக்கான திறப்புக் குறிப்புரை (ரிமீஹ் ழிஷீtமீ கிபீபீக்ஷீமீssன் தமிழ்ப் பெயருக்கு, நன்றி: ச. தமிழ்ச் செல்வனுக்கு)யாக பேரா. மணிக்குமாரின் கட்டுரை அமைந்திருக்கிறது. நௌரோஜியின் படைப்புகளிலேயே ஆகச் சிறந்ததென அவர் எழுதிய Ôஇந்தியாவின் வறுமையைக் குறிப்பிடுகிறார் பிபன். இந்திய தேசியம் உருவான காலகட்டத்தில், வறுமையைப் போன்று ஆள்வோர், ஆளப்படுவோர் இடையே பெரும்  இடைவெளியை ஏற்படுத்திய பெருங்கோபத்தை ஏற்படுத்திய பிரச்;னை, வேறெதுவுமில்லை என்கிறார் அவர். Ôமுரட்டு வேகத்தோடு இருக்கும் ஏகாதிபத்தியம்தான் காட்டுமிராண்டித்தனம்Õ என்று 1904ம் ஆண்டு ஆகஸ்டில், ஹேக் கில் நடந்த சர்வதேச சோஷலிஸ காங்கிரசில் தாதாபாய் நௌரோஜி கடுமையான வார்த்தைகளால் பிரிட்டிஷ் ஆட்சியைத் தாக்கி உரையாற்றியதையும் நூலின் இறுதிப்பகுதியில் பிபன் மேற்கோள் காட்டுகிறார். அந்நிய முதலாளியத்திற்கு  எதிராக, சுதேசிகள் முன்வைத்த எல்லாவிதமான பொருளாதாரச் சிந்தனைகளையும் மிக விரிவாக, ஆழமாக ஆராய்கிற நூல் இது. சுப்பாராவின் மொழி பெயர்ப்பு வெகு சரளமான நடையில் அமைந்திருப்பது சிறப்பான அம்சம்.

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்




வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்
ஆர். நார்மன் தமிழில்: ச. சுப்பாராவ்
'வால்மார்ட்' என்ற பெயர் சமீபத்தில் இந்தியா முழுவதிலும்  பேசப்பட்ட ஒன்று. சில்லறை வணிகத்தில் கடை விரிக்கப்போகிற பன்னாட்டு பகாசுர நிறுவனம் இது. நமது ஊர் மளிகைக்கடைகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கையிலேயே அது  தலைநகரங்களில் கடைகள் கட்டத் தொடங்கியாயிற்று. அமெரிக்க நகரமான கிரீன் ஃபீல்டு எனும் சிறு நகரத்தில் வித்தியாசமான ஒரு தேர்தல் நடந்தது. ஒன்று அந்த ஊரின் அருகே இரு பெரும் நெடுஞ்சாலைகள். அங்கே 1, 23,000 சதுர அடியில் கடை கட்டுவதற்கு வால்மார்ட்டிற்கு 63 ஏக்கர் தொழிற்பேட்டை இடத்தை அளிக்கலாமா? இரண்டு பொதுவர்த்தக மாவட்டத்தில் 40,000 சதுர அடிக்கும் மேலான பெரிய கட்டிடத்தை அனுமதிக்கலாமா?  'வால்மார்ட்டை ஆதரித்தவர்கள் தங்களை 'வால்' என்றும், அதற்கு எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்த இந்நூலாசிரியரான ஆல்பர்ட் நார்ட்டன் உள்ளிட்டவர்கள் தங்களை வாலுக்கு எதிரானவர்கள் என்றும் அழைத்துக் கொண்டார்கள். எதிர்ப்பாளர்கள்,  'வாலை நிறுத்துங்கள். மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் 'இல்லை' என வாக்களியுங்கள்' என எழுதி வைத்தார்கள். வால்மார்ட் நிர்வாகம், கையெழுத்தில்லாத மொட்டைக் கடுதாசிகளை எல்லா வீடுகளுக்கும் அனுப்பியது. ஆனால் எங்கள் நகரத்தை நாங்கள் இழக்கிறோம்'  என்ற எதிர்ப்பிரச்சாரம்தான் மக்களின் மனதையும், அறிவையும் தொட்டது. வாக்கெடுப்பு முடிவில் 9 வாக்கு வித்தியாசத்தில் வால்மார்ட் தோற்றது. உள்ளூரில் வால்மார்ட்டை முறியடிக்க வேண்டுமானால் உள்ளூர் மக்கள்தான் களத்திலிறங்க வேண்டும். இறங்கினால் வெற்றி நிச்சயம். தமிழில் இந்த நூலைத் தந்திருப்பவர் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பாளியான ச. சுப்பாராவ். ஒவ்வொரு சிறு கடை உரிமையாளர் கையிலும் இப்புத்தகம் போய்ச் சேர்ந்தால், விளைவுகள் பிரம்மாண்டமாக இருக்கும்.

உணவு மக்களின் அடிப்படை உரிமை




உணவு; மக்களின் அடிப்படை உரிமை
பிருந்தா காரத் தமிழில்; ஆர். பெரியசாமி
 'உலகத்திலேயே இந்தியாவில்தான் சத்துணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில் நூற்றுக்கு எழுபது பேர் சத்துணவின்மையால் அவதிப்படுபவர்களே. சரத்பவார் தலைமையிலான உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது மாநிலங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டைக் குறைத்து, கோதுமைக்குப் பதிலாக தானியங்கள் ஒதுக்கீடு, சம்பூர்ண கிராம ரோஜ்கார் யோஜனா திட்டப்பணிகளுக்கான ஊதியத்தின் ஒரு பகுதியாக உணவுத் தானியங்கள் வழங்கும் முறை நீக்கம், வறட்சிப் பகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் குறைப்பு, உணவு தானியங்களின் விலை அதிகரிப்பு இப்படியான பல தடித்தனமான யோசனைகளை முன்னெடுத்துச் செல்லும் முனைப்பில் உள்ளது. உணவுக்கான மானியங்களை  குறைப்பதன் மூலமே நித்ப்பற்றாக்குறைக்கு முடிவு கட்ட ஒவ்வொரு மத்திய அரசும் முயல்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் கடைசியாகத்தான் சாப்பிட வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தமது தேவைக்குக் குறைந்த அளவுக்கே சாப்பிடுமாறு நேர்கிறது' என்றெல்லாம் பிருந்தா காரத் கடுமையான விமரிசனங்களை முன் வைக்கிறார். பசித்த வயி¤றுகளுக்கு உணவளிப்பதில் இத்தனை முட்டுக்கட்டைகள் போடும் மத்திய அரசு, ஏழை மக்களிடமிருந்து இம்மாதிரி கொள்ளையடித்து பெருவணிக நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகை மட்டுமே ஆண்டிற்கு சுமார் 5 லட்சம் கோடி என்கிறார் அவர். உணவு மற்றும் பொது விநியோகம் ஆகிய அம்சங்களில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அரசுகள் பாராட்டத்தக்க வகையில் செயல்படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த உணவுப் பாதுகாப்பு மசோதா ஏழைமக்களுக்கு கொடுப்பது குறைவு. எடுத்துக்கொள்வதோ மிக அதிகம். இந்நிலையில், இதை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அணிகளும், தலைவர்களும், ஆதரவாளர்களும் போராடி வருவதை இந்நூல்  முழுவதிலும் பிருந்தா காரத் பதிவு செய்திருக்கிறார். அவருடைய எளிய, நேரடியான உரைகளை அதே தன்மைகளுடன் தமிழாக்கித் தந்திருக்கிறார் ஆர். பெரியசாமி.